அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களான சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள் ஆகியவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தக்காளி விலை ஆப்பிள் விலைக்கு நிகராக கிலோ 140 ரூபாய் வரை விற்பனை ஆனது. தமிழ்நாடு அரசு அங்காடிகளில் தக்காளியை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்து வருகிறது. அதே போல இஞ்சி கிலோ ரூ.300 வரை விற்பனையாகிறது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சமையல் எண்ணெய்கள் கணிசமாக விலை அதிகரித்துள்ளது. அதே போல, காய்கறி விலை கத்தரிக்காய், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் ஏற்கெனவே கவலையில் உள்ள நிலையில், ஜி.எஸ்.டி வரம்புக்குள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் அரிசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் விலை உயர்த்தப்பட்ட பின்னர் எந்த பொருட்களின் விலையையும் மீண்டும் வியாபாரிகள் குறைப்பது இல்லை.
தமிழ்நாட்டில் மக்களின் அன்றாட உணவில் முக்கிய உணவாக இருக்கும் சோறு, இட்லி, தோசை உணவுக்கு அரிசியின் விலை தற்போது கடுமையாக அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இம்மாதம் 18-ம் தேதி முதல் 5 சதவீத ஜி.எஸ்.டி-யின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை ஜி.எஸ்.டி கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதற்கு அரிசி ஆலைகள் மற்றும் அரிசி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவதால் அரிசி உள்ளிட்டவற்றின் விலை உயரும் என்று அவர்கள் தெரிவித்தனர். பேக்கேஜ் செய்யப்படாத அரிசி ஜி.எஸ்.டி வரம்பிற்குள் வராது என்றாலும், மாநில உணவுத் துறையானது அனைத்து கடைக்காரர்களுக்கும் அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை பேக் செய்யப்பட்ட வடிவில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்
சில மாதங்களுக்குப் முன்பு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள அரிசியின் விலையானது, தற்போது 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. 25 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
தரமான முதல் ரக சாப்பாட்டு அரிசி 25 கிலோ மூட்டை கடந்த மாதத்தில் ரூ.1,400 ஆக இருந்த நிலையில், அவை தற்போது ரூ.1,600 ஆகவும், 2-வது ரக சாப்பாட்டு அரிசி ரூ.1,200-ல் இருந்து ரூ.1,400 ஆகவும் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடியுள்ளது. இதே போல இட்லி அரிசியும் 25 கிலோ மூட்டை ரூ.850-ல் இருந்து ரூ.950 ஆக உயர்ந்துள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளது. வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாகவே அரிசி விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், மதுரையில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நாட்டு பொன்னி ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 55 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக பொன்னி விலை 1 கிலோவிற்கு 8 ரூபாய் உயர்ந்து கிலோ 42 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக விற்கப்படுகிறது.
பிரியாணி அரிசி ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்ட நிலையில் தற்போது 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பச்சரிசி விலை ஒரு கிலோவிற்கு 12 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பச்சரிசி குருணை ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் அதிகரித்து, 25 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அரிசி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.