இசை விமர்சகர் சாருகேசி மரணம் : இசை விமர்சகர் மற்றும் மூத்த எழுத்தாளுருமான சாருகேசி உடல்நலக் குறைவால், நேற்று அவர் மரணமடைந்தார். அவரின் வயது 80.
பிரபல இதழ்களில் தொடர்ந்து கர்னாடக இசைக்குறித்தும், இசைக் கலைஞர்கள் குறித்தும் எழுதி வந்த சாருகேசியின் இயற்பெயர் எஸ் விஸ்வநாதன் சுப்ரமணியன்.
சொந்த முயற்சியின் விளைவாக கர்னாடக சங்கீதம் பற்றிய அறிவைப் பெற்றார். கிட்டத்தட்ட 60 வருடங்களாக எழுதி வரும் சாருகேசி ஆங்கிலத்திலும் எழுதி வந்தார்.
அவருடைய ஆங்கிலக் கட்டுரைகள் ஹிந்து, வீட் எண்ட் எக்ஸ்பிரஸ், எக்கனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்துள்ளது. தன்னுடைய முதல் கட்டுரையை 1955ல் கண்ணன் இதழிற்காக எழுதினார். தன்னுடைய கதையை கல்கி இதழில் எழுதினார்.
இசை விமர்சகர்
இலக்கியம் மற்றும் இசையில் அதிக ஈடுபாடு உடையவர். இசைக்கலைஞர்களின் நிறை குறைகளை மதிப்பிட்டு அதனை யார் மனமும் புண்படாமல் சுட்டிக் காட்டுவது இவருடைய வழக்கம்.
இயல் இசை நாடகம் என்ற நூலை எழுதிய இவர், மூன்று ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். புற்றுநோயால் காலமான சாருகேசிக்கு எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.