தந்தையை அடித்து கொன்று எரித்ததுடன், மகளை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் மரண தண்டனையை எதிர்த்து இருவரும், ஆயுள் தண்டனையை எதிர்த்து மூவரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான தங்கவேலு, செல்வம் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். அத்தொகையை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த செல்வம், தன் உறவினர்களுடன் சேர்ந்து நோட்டு வாங்கச் சென்ற தங்க வேலுவையும், அவரது 11 வயது மகளையும் கடத்தி சென்றுள்ளனர். பின்னர், தங்கவேலுவை அடித்து கொன்று எரித்த அக்கும்பல், சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொன்றது.
கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த இச் சம்பவம் தொடர்பாக செல்வம், ரங்கராஜ் உள்ளிட்டவர்களைக் கைது காவல்துறை செய்தது. இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் நீதிமன்றம், செல்வம், ரங்கராஜுக்கு மரண தண்டனை வழங்கி கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது. மேலும், வழக்கில் தொடர்புடைய தெய்வசிகாமணி, நாகராஜ், ஆனந்தன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அமர்வாக விசாரித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.