கோவை மாநகர பகுதிகளில் சமீப நாட்களாக பல்வேறு இடங்களில் தீ விபத்து சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சில இடங்களில் ஏற்படும் தீ விபத்துகள் அதிகப்படியான பொருட் சேதங்களை உண்டாகுகிறது. இந்நிலையில் தீ விபத்துகள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டிய சில வழிமுறைகளை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கோவை மாநகரில் சமீப நாட்களாக தீ விபத்துகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலும் மின்கசிவு காரணமாகவே தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. கோடை காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகள் அதிகமாக நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
குடோன் வைத்துள்ளவர்கள், கடைகள், வீட்டில் இருப்பவர்கள் என பலரும் கோடைக்காலத்தில் குளிர்சாதன பெட்டிகளையும் ஏசியையும் அதிகமாக பயன்படுத்துவதால் ஒருமுறை எலக்ட்ரீசியனை கொண்டு அனைத்தையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலமாக மின்கசிவு நிகழ்வுகளை குறைக்க இயலும், தீ விபத்துகளையும் தடுக்க இயலும்.
மின்சார காரணங்கள் மட்டுமின்றி அருகில் குப்பைகளை ஏதேனும் கொளுத்தினால் அது முழுவதுமாக அணையும் வரை காத்திருந்து, பிறகு மற்ற வேலைகளை பாருங்கள். அதேபோல் தீப்பொறி வருவதற்கு வேறு ஏதேனும் சாத்தியக்கூறுகள் இருந்தாலும் அதனையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே தீ விபத்துகளை தடுக்க வேண்டும். உயிர் சேதம், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்கு காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதுவே பொதுமக்களுக்கு காவல்துறையின் அன்பான வேண்டுகோள் எனத் தெரிவித்துள்ளார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“