சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான மூலம் கடத்தி வரப்பட்ட 5.6 கிலோ தங்க நகைகளை கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான மூலம் கோவை வரும் விமானத்தில் தங்க நகைகள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான பயணிகள் 6 பேரை பிடித்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கச்சா செயின்கள் மற்றும் வளையல்கள் வடிவில் தங்கத்தை அவர்களின் உள்ளாடைகளில் இருந்தும் உடைகள் மற்றும் பைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்க நகைகளை வருவாய் புலனாய் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
சுமார் 5.6 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு 2.94 கோடி ரூபாய் எனவும் இதை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த அப்சல் என்ற பயணியை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவினர் அவரிடம் விசாரணை நடத்தி ஜாமீனில் வெளிவர முடியாத குற்றத்தின் கீழ் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைத்தனர்.

மேலும் திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்கின்ற மற்றொரு பயணியிடம் 50 லட்சத்திற்கு அதிகமாகவும், ஒரு கோடிக்கும் குறைவாக இருந்ததால் ஜாமீனில் வெளிவரக் கூடிய குற்றத்தில் கைது செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் இது குறித்து வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.