அதிமுகவின் வழிகாட்டுக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான மாணிக்கம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ பாஜவில் இணைந்துள்ளதால் அதிமுக அதிர்ச்சியடந்துள்ளது.
தமிழ்நாடு பாஜக கடந்த சில ஆண்டுகளாக திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் அதிருப்தியுடன் உள்ளவர்களை பாஜகவில் இணைத்து வருகிறது. திமுகவின் கு.க.செல்வம், வி.பி.துரைசாமி அதிமுகவில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவரான பிறகு, கட்சியைப் பலப்படுத்தி வருவதுடன் மாநிலத்தில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். கட்சியில் இளம் ரத்தம் பாய்ச்சும் நோக்கத்தில் மாவட்ட தலைவர்கள் பதவிக்கு இளைஞர்களை நியமித்துள்ளார்.
இந்த நிலையில்தான், அதிமுகவின் வழிக்காட்டுக்குழு உறுபினரும் சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான மாணிக்கம் இன்று (நவம்பர் 24) திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகக் கருதப்பட்ட அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்திருப்பது அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகக் கருதப்படுகிறார்.
மாணிக்கம் கடந்த சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியபோது அதிமுகவினரே வியந்துபோனார்கள்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், முதலில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக தனது பணியை தொடங்கியவர். முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் பெரும்பாலான ஒப்பந்த வேலைகளைச் செய்து வளர்ந்தார். அதற்கு பிறகு, 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஓபிஎஸ் ஆதரவாளராக மாறினார். அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ் ஆதரவுடன் செல்வாக்கு மிக்க ஒப்பந்ததாரராக இருந்தார்.
ஜெயலலிதா இருந்தபோது, மதுரையில் பிரச்சாரக்கூட்டத்திற்காக பாண்டி கோயில் அருகே தனது நிலத்தைக் கொடுத்ததன் மூலம் ஜெயலலிதா நம்பிக்கையைப் பெற்றார். இதையடுத்து, மாணிக்கம் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றார். மேலும், மதுரை புறநகர் அதிமுக மாவட்ட துணை செயலாளர் ஆனார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஓபிஎஸ் ஆதரவாளாக இருந்த மாணிக்கம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதிமுகவில் வழிகாட்டும் குழு உறுப்பினரானார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாணிக்கம் திமுகவில் இணைய முயற்சித்ததாகவும் ஆனால் அதற்கு திமுகவில் எதிர்ப்பு எழுந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில்தான், மாணிக்கம் இன்று பாஜகவில் இணைந்திருக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணியில் இருக்கிறபோதே அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்திருப்பது அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணிக்கம் பாஜகவில் இணைந்தபோது, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.