/tamil-ie/media/media_files/uploads/2017/09/Z208.jpg)
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென்னையில் தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாத மாணவி அனிதா மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக சார்பில் அனிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அக்கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
மேலும், அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்து மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் ஒரு நல்ல முடிவு நிச்சயம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோல், நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க சென்னை அறிவாலயத்தில் செப்டம்பர் 4-ம் தேதி (இன்று) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் எனவும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை ஐந்து மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன், கே.ஆர்.ராமசாமி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மத்தியப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்தும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும், முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், "மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, திருச்சியில் செப்டம்பர் 8-ஆம் தேதி கண்டன பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். நிச்சயம் இந்த பொதுக் கூட்டம் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் இருக்கும். அதையும் மீறி, மத்திய மாநில அரசுகள் மெத்தனமாக இருந்தால், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் முடிவு எடுக்கப்படும். அனிதாவின் மரணத்திற்கு தமிழக அரசும், மத்திய அரசுமே தான் காரணம்" என்றார்.
முன்னதாக, 'தமிழகத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு ஓர் ஆண்டு விலக்கு அளிக்கப்படும்' என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நீட் தேர்வு குறித்து குழப்பம் உச்சத்தில் இருக்கும்போது கூறினார். இருப்பினும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள், 'மத்திய அரசின் பொய் வாக்குறுதியால்தான் அனிதா இறந்தார்' என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.