/indian-express-tamil/media/media_files/2025/10/12/sekarbabu-2025-10-12-17-00-01.jpg)
காஞ்சிபுரம்: உபயோகத்தில் இல்லாத கோவில் தங்கத்தை உருக்கி, தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததன் மூலம், 21 கோவில்களுக்கு ஆண்டுதோறும் ₹17 கோடியே 76 லட்சம் வட்டித் தொகையாகக் கிடைப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்த வட்டித் தொகை அந்தந்தக் கோவில்களின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இன்று (அக்.12) காஞ்சிபுரத்தில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜூ முன்னிலையில், அமைச்சர் சேகர்பாபு மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நான்கு கோவில்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட 53 கிலோ 386 கிராம் எடையுள்ள பழைய தங்கத்தை, மும்பையில் உள்ள மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி முதலீடு செய்வதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, 3,707 கோவில்களுக்கு ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட 68 பழமையான கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சென்று, ரூ.29 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை மாண்புமிகு கைத்தறி & துணிநூல் துறை அமைச்சர் திரு.காந்தி அவர்களுடன் இன்று (12.10.2025) நேரில் பார்வையிட்டு (1/2) pic.twitter.com/V94vRrK9xn
— P.K. Sekar Babu (@PKSekarbabu) October 12, 2025
கோவில்களுக்குக் காணிக்கையாக வந்த, பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் சுத்திகரிக்கப்பட்டு, நீதியரசர்களின் மேற்பார்வையில் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகின்றன. இதன்மூலம் இதுவரை 1,074 கிலோ சுத்தத் தங்கம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 13 கோவில்களில் இருந்து பெறப்பட்ட 378 கிலோ பலமாற்றுத் தங்கம் உருக்காலையில் உருக்கத் தயாராக உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் அறநிலையத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உபயதாரர்கள் மட்டும் ₹1,528 கோடி நன்கொடை அளித்துள்ளனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ₹29 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று, வரும் டிசம்பர் 8-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். நிலுவையில் இருந்த ₹650 கோடி கோவில் வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.