/tamil-ie/media/media_files/uploads/2017/10/dengue-1-1.jpg)
நாளுக்குநாள் டெங்கு காய்ச்சலின் வீரியம் அதிகமாகி வரும் நிலையில், கடந்த 6 நாட்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 12,000 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், சுமார் 1,150 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பதுபோல், தமிழக அரசு டெங்கு காய்ச்சல் அதிதீவிரமாக இருக்கும்போது, தற்போது தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறலாம் என தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் சுகாதார பணியாளர்கள் குறைவாக இருப்பதால், டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “9,000 கிராம சுகாதார செவிலியர்கள், 3,500 சுகாதார வல்லுநர்கள் ஆகியோர் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், 410 நடமாடும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர்த்து, தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டம், 1939 பிரிவுகள் 83, 84 சட்டப்பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269-ன்படி, சட்டப்படி உரிமையாளர் மீது நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல் பெற 104 என்ற எண்ணையும், 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களையும் 9444340496 / 9361482899 என்ற கைப்பேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.