Advertisment

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை

மத்திய அரசின் ஆலோசனை, சட்ட வல்லுனர்களின் கருத்து உள்ளிட்டவைகளின் அடிப்படையில் ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என தெரிகிறது

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வரவுள்ளார்.

Advertisment

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமாதை யடுத்து, தமிழக அரசியலில் நாள்தோறும் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் பன்னீர் செல்வம் நீக்கபட்டார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் பன்னீர் செல்வம் அணியுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் அணியினர் கடந்த மாதம் இணைந்தனர்.

இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.

இதனிடையே, முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனுக் கொடுத்த 19 எம்எல்ஏ-க்களில் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கடந்த 10-ம் தேதியன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சட்டரீதியாக நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்றார். ஆனால், ஆளுநர் மும்பை கிளம்பிச் சென்று விட்டார்.

இதையடுத்து, பலமுறை ஆளுநரை சந்தித்து, பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால், தமிழக முதல்வர் தனதுபெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசரித்த நீதிமன்றம், அக்டோபர் 4-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்ததுடன், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து ஆளுநர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நிலவி வரும் இந்த சூழ்நிலைகள் குறித்தும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவது குறித்தும் ஏற்கனவே சட்ட வல்லுனர்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண நிலை குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வரவுள்ளார். மும்பையில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னை வரவுள்ளார். மத்திய அரசின் ஆலோசனை, சட்ட வல்லுனர்களின் கருத்து உள்ளிட்டவைகளின் அடிப்படையில் ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என தெரிகிறது.

Mk Stalin Dmk Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment