மெர்சல் விவகாரத்தில் கருத்து சுதந்திரம் மீது பாஜக குண்டு வீசுகிறது என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை விட்டிருக்கிறார்.
மெர்சல் பட விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை :
நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியையும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் விமர்சித்து காட்சியமைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்க வேண்டுமென்றும் பாஜக தமிழகத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மிரட்டியிருந்தார்.
பாஜக தலைவர்கள் ஹெச்.ராஜா, ஜோசப் விஜய் என்று மத ரீதியான சாயம் பூசி மிரட்டியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் மத்திய அரசை விமர்சித்தால் இந்துக்கள் மெர்சலாகி விடுவார்கள் என்று மோதலை உருவாக்கும் வகையில் பேசியிருந்தார். ஆளும் கட்சியின் நிர்வாகிகள், அரசு எந்திரங்கள் தங்கள் கட்சியின் கையிலிருப்பது போன்று தடிஎடுத்துக் கொண்டு அலைவது வெட்ககரமானது.
மத்திய அரசின் தணிக்கைத்துறையே ஆளும் கட்சியின் கலாச்சார காவலர்கள் போன்று வெறி பிடித்து அலையும் நிலையில் அதையும் தாண்டி வந்த ஒரு படத்திலுள்ள விமர்சனங்களையே தாங்க முடியாமல் படைப்பு சுதந்திரம், மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீது குண்டு வீசுகிறார்கள்.
தயாரிப்பாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள், இவர்களையெல்லாம் மிரட்டுகிற போது தமிழகத்தில் இருக்கும் முதுகெலும்பற்ற அரசால் இதை காப்பாற்ற முடியாது என்கிற பயமும், அந்த அரசும் மத்திய ஆளும் கட்சியின் மனமறிந்து சேவகம் செய்வதும், திரைப்படத்துறையினரையும் பயம் கொள்ள வைத்திருக்கிறது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி விடுவதாக தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்.
பாஜகவின் இந்த அடாவடித்தனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. சமூக இயக்கங்களும், பொது மக்களும் ஒரே குரலோடு பாஜகவின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.