Advertisment

குட்கா ஊழல் : நீதிமன்றத்தில் உண்மையை மறைத்தாரா கிரிஜா வைத்தியநாதன்?

குட்கா ஊழல் தமிழக அரசியவாதிகளை மட்டுமின்றி, உயர் அதிகாரிகள் வட்டாரத்தையும் உலுக்கி எடுக்கிறது. இதில் லேட்டஸ்ட் சர்ச்சை, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
குட்கா ஊழல் : நீதிமன்றத்தில் உண்மையை மறைத்தாரா கிரிஜா வைத்தியநாதன்?

குட்கா ஊழல் தமிழக அரசியவாதிகளை மட்டுமின்றி, உயர் அதிகாரிகள் வட்டாரத்தையும் உலுக்கி எடுக்கிறது. இதில் லேட்டஸ்ட் சர்ச்சை, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் உண்மையை மறைத்ததாக சொல்லப்படுவதுதான்!

Advertisment

2013-ம் ஆண்டே குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழகத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை செய்தார். ஆனாலும் தங்கு தடையின்றி மறைமுகமாக குட்கா பிசினஸ் நடைபெற்றே வந்தது. இது தொடர்பாக மீடியாக்களில் தொடர்ந்து செய்திகள் வந்தபோதும் அதிகாரிகள் அசைந்து கொடுக்கவில்லை.

2016 ஜூலை 8-ம் தேதி சென்னையில் பிரபல குட்கா நிறுவனங்களின் குடோன்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது ஒரு குட்கா நிறுவனத்தின் பெண் கணக்காளரிடம் இருந்து, குறிப்பு நோட்டு ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும், போலீஸ் உயர் அதிகாரிகள் இருவர் உள்பட பலருக்கும் மொத்தம் 39.91 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. அதாவது சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்காக இந்தத் தொகையை மேற்படி நிறுவனம் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தவர் டி.கே.ராஜேந்திரன். அவருக்கு அண்மையில் ஓய்வுக்கு பிறகும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொழிற்சங்க வாதியான கதிரேசன், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘ரெய்டு நடந்த மறுதினமே (2016, ஜூலை 9) லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் குறித்து அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவுக்கு, வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என கூறியிருந்தார்.

இது தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படியும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி சசிதரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘2016 ஜூலை 9-ம் தேதியே ஐ.டி. துறையில் இருந்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக மனுதாரர் வழக்கறிஞர் கூறினார். அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்ததில் அப்படி எந்த தகவல் பரிவர்த்தனையும் இல்லை’ என தலைமைச் செயலாளர் பதில் தெரிவித்துள்ளார். இந்தப் பதில்தான் சர்ச்சை ஆகியிருக்கிறது.

இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பு கூறுகையில், “ஜூலை 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள், ஆவண பூர்வமாக எந்தத் தகவலையும் அப்போதைய தலைமைச் செயலாளருக்கு கொடுக்கவில்லை என்பது நிஜம்தான். அந்த வகையில் கிரிஜா வைத்தியநாதன் தாக்கல் செய்த அபிடவிட் சரிதான்!

ஆனால் ரெய்டு நடந்த மறு மாதமான 2016 ஆகஸ்ட் 12-ம் தேதி வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் (புலனாய்வு) பி.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமைச் செயலகத்திற்கே சென்று அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகனராவை சந்தித்தார். குட்காவை சட்டவிரோதமாக விற்பதற்காக தமிழக அரசியல்வாதிகளுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் 39.91 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களுடன் அறிக்கையை அப்போது கொடுத்தார். ஒரு அமைச்சர் மற்றும் இரு உயர் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் அதில் இடம்பெற்றன. அதே அறிக்கையின் நகலை அப்போதைய டி.ஜி.பி. அசோக்குமாரிடமும் நேரடியாக வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் வழங்கினார். அப்போதைய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோரிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்தது தொடர்பாக உரிய ‘அக்னாலட்ஜ்மென்ட்’டையும் வருமான வரித்துறை பெற்றுக்கொண்டது.

இதோடும் வருமான வரித்துறை சும்மா உட்கார்ந்துவிடவில்லை. மறுநாளே தான் நேரில் சந்தித்து கொடுத்த அறிக்கை குறித்தும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் ஒரு கடிதத்தை அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகனராவுக்கு ஐ.டி. அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதினார். தலைமைச் செயலாளரின் அலுவலக மூத்த உதவி நிர்வாக அதிகாரியான டி.பாபு அந்தக் கடிதத்தை பெற்றுக்கொண்டு ‘அக்னாலட்ஜ்மென்ட்’ செய்திருக்கிறார்.

இதன்பிறகு அப்போதைய லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனர் மஞ்சுநாதா இந்த விவகாரங்கள் பற்றி கேள்விப்பட்டு, ஐ.டி. துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதாவது, குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும்படி அவர் கேட்டிருந்தார். அவருக்கு பதில் எழுதிய ஐ.டி. அதிகாரி பாலகிருஷ்ணன், ‘அந்த அறிக்கை ஏற்கனவே தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது’ என கூறினார்.

ஆக, குட்கா ஊழல் தொடர்பாக இவ்வளவு ஆவணங்களும் கடிதங்களும் பறிமாறப்பட்டிருக்கின்றன. ஜூலை 9-ம் தேதி எந்த ஆவணங்களும் பறிமாறவில்லை என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அபிடவிட் தாக்கல் செய்த இப்போதைய தலைமைச் செயலாளர் ஆகஸ்ட் 11-ல் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகனராவை ஐ.டி. அதிகாரி பாலகிருஷ்ணன் சந்தித்ததையும் கூறியிருக்க வேண்டும். அடுத்த நாளே கடிதம் அனுப்பியதையும் கூறியிருக்க வேண்டும். இதையெல்லாம் கிரிஜா வைத்தியநாதன் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை ராம மோகனராவ் இந்த ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டாரா? என்பதை அரசுத் தரப்புதான் விளக்க வேண்டும்’ என்கிறார்கள் ஐ.டி. அதிகாரிகள் தரப்பில்!

குட்கா ஊழல், தமிழக அதிகார வட்டாரத்தின் காலைச் சுற்றிய பாம்பு!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment