சென்னையைத் தாக்கிய கனமழை இன்று தென் மாவட்டங்களை போட்டுத் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
கனமழையால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் கனமழை பெய்யும். வடகடலோர மாவட்டங்களிலும் இதன் தாக்கும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்வதால், தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இணையத்தளத்தில் தேதி வாரியாக கனமழை குறித்த அறிவிப்பை தொகுத்து வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
3.11.17 (இன்று) : தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். புதுச்சேரி மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களின் உள் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யும்.
4.11.17 (சனிக்கிழமை) : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.
5-11-17 (ஞாயிற்றுக்கிழமை) : தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
6-11-17 (திங்கட்கிழமை) : தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும்.
‘நவம்பர் 3-ந்தேதி (இன்று) தென் தமிழ்நாடு முழுவதும் பலத்த, மிக பலத்த மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். நாளை (4-ந்தேதி)யும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த 1-ம் தேதி மாலையில் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவானது. ஆனாலும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் மானாவாரி குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. தற்போதைய மழை பரவலாக தென் மாவட்டங்களை குளிர்வித்தால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக அமையும்.