தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் சில இடங்களிலும், செப். 2-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, செப். 3, 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று மழை நிலவரம்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப் பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் புதன்கிழமை மாலை 5.30 மணி வரை தேனி பெரியகுளம், திருச்சி சிறுகமணியில் தலா 5 செ.மீ மழையும், கடலூர் விருத்தாசலத்தில் 4.7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“