Advertisment

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வாய்ப்பூட்டு : உயர்நீதிமன்றம் உத்தரவு!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajendhira balaji

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த மே மாதம் 24-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அறிவித்து மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் ஆவின் பால் தவிர, அனைத்து தனியார் நிறுவன பால் உற்பத்தியின் போதும், இறந்துபோனவர்களின் உடலைப் பதப்படுத்தும் ரசாயனம் கலக்கப்படுகிறது. இதனைக் குடித்தால் கேன்சர் வரும். காலையில் எழுந்தவுடன் குழந்தைகள் முதலில் கேட்பது பால் தான். ஆனால், அந்த பாலில் இதுபோன்ற ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இதனால் தான், இப்போதெல்லாம் நிறைய குழந்தைகளுக்கு கேன்சர் வருகிறது.

Advertisment

நான் நிறைய இடத்தில் விசாரித்துவிட்டேன். ரசாயனம் கலப்பது உறுதி தான். உண்மையான பால் என்றால், 5 மணி நேரத்தில் கெட்டுப் போக வேண்டும். ஆனால், நாள்கணக்கில் கெடாமல் இருப்பதற்கு பெயர் பாலா? இதிலிருந்தே அது ரசாயனம் கலக்கப்பட்ட பால் என்று தெளிவாக தெரிகிறது.

இதுகுறித்த ஆதாரங்களை நான் திரட்டி வருகிறேன். அதன்பின், நிச்சயம் அந்த தனியார் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சரே, இப்படி வெளிப்படையாக ஆவின் பால் தவிர அனைத்து தனியார் நிறுவன பால் உற்பத்தியிலும் ரசாயனம் கலக்கப்படுகிறது என்று கூறியிருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் "நெஸ்லே, எவ்ரிடே பால் பவுடர் ஆகியவை உலகத் தரம் வாய்ந்தது என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நிறுவனங்களின் பால் பவுடரில் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது.

ரிலையன்ஸ் பால் கம்பெனி இந்தியாவில் பிரபலமானது. இந்த பாலிலும் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் தான் இந்த பால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கெட்டுப்போன பாலில் அமிலத் தன்மையை குறைப்பதற்காக காஸ்டிக் சோடாவை சேர்க்கின்றனர். பின்னர் அமிலத் தன்மை குறைந்தவுடன் அவற்றை பாலாக மாற்றாமல், பால் பவுடராக மாற்றிவிடுகிறன்றனர்.

இந்த பால் பவுடரை வாங்கிச் செல்லும் மக்கள் திரும்ப அதை பாலாக்கி, சுடவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதனால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது.

தற்போது நான் வைத்திருக்கும் இந்த பொருட்களில் காஸ்டிக் சோடா என்பது உள்ளது. இதை யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஆவின் பால், ஆவின் தயிர், ஆவின் பால் பவுடர் இவற்றையெல்லாம் தனியார் கம்பெனிகள் சோதனை செய்கின்றனர். அவற்றில் ஆவின் பொருட்கள் அனைத்தும் தரமானது என ஆய்வறிக்கையும் கொடுத்துள்ளன.

உலகத்தரம் வாய்ந்த கம்பெனிகளின் பால் பொருட்களிலேயே இவ்வளவு கலப்படம் இருக்கும் என்றால், சாதாரண பால் கம்பெனிகளில் எவ்வளவு கலப்படம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

இந்த பொருட்களை வாங்கக் கூடாது என்று சொல்லக் கூடிய அதிகாரம் என்னிடம் இருந்தால், இப்பொழுதே அதன் மீது தடை விதித்துவிடுவேன். ரசாயனம் கலந்த கம்பெனியின் பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் மீது தடை விதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.

தற்போதைய நிலவரப்படி, எந்த நிறுவனத்திற்கும் நாங்கள் நற்சான்றிதழ் கொடுக்க விரும்பவில்லை. பின்நாட்களில் அந்த நிறுவனங்கள் ஏதேனும் தவறு செய்தால், நீங்கள் தானே நற்சான்றிதழ் கொடுத்தீர்கள் என என்னிடம் கேள்வி எழுப்பும் வாய்ப்பு உள்ளது.

முன்னதாக மாதவரம் ஆய்வுமையத்தில் வைத்து பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களை ஆய்வு செய்தபோது 4 நிறுவனங்கள் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டு, ஆய்வறிக்கையை தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டு வருவதாக ஹட்சன், டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. மேலும், அமைச்சரின் இந்த பேச்சுக்கு நஷ்ட ஈடாக மூன்று நிறுவனங்களுக்கும் தலா 1 கோடி வீதம் ரூ.3 கோடி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தன.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், உரிய ஆதாரங்கள் இன்றி, தனியார் பால் நிறுவன கலப்படம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக, 4 வாரத்தில் அமைச்சர்  பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

High Court Aavin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment