/tamil-ie/media/media_files/uploads/2017/06/a645.jpg)
கடந்த மே மாதம் 7-ம் தேதி மருத்துவ பாடங்களுக்கான நீட் தேர்வை பல மொழி மாணவர்கள் எழுதினர். இதில் ஒரே மாதிரியான வினாத்தாளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படவில்லை, ஆங்கிலத்தில் இருந்த வினாத்தாளுக்கும் தமிழில் இருந்த வினாத்தாளுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தன. இதனால் இந்தத் தேர்வினை செல்லாது என்று அறிவித்து, அதே சமயம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவர்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் மாணவ மாணவிகளின் மனுவை ஏற்று, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து கடந்த மே 24-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால், மருத்துவ சேர்க்கையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட கடந்த ஜூன் 12-ஆம் த்தி அனுமதி அளித்து உத்தரவிட்டது.
மேலும், அதன் தீர்ப்பில், ஒரு லட்சம் மாணவர்கள் ஹிந்தியில் நீட் தேர்வினை எழுதினார்கள். ஆனால், ஒரு லட்சத்திற்கும் குறைவான மாணவர்களே மாநில மொழிகளில் தேர்வெழுதினர். இதனால், மாநில உயர் நீதிமன்றங்கள் இனி நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், முருகவேல் என்பவர் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனை இன்று விசாரித்த நீதிமன்றம், "மாநில உயர் நீதிமன்றங்கள் இனி நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது" என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.