அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்வேன்; எனக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை என சசிகலாவை சந்தித்த பிறகு டி.டி.வி.தினகரன் கூறினார்.
அ.தி.மு.க. அம்மா அணியில் ஆதிக்கம் செலுத்துவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா? துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனா? என்கிற பலப்பரீட்சை ஏற்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 5 முதல் கட்சிப் பணியை தலைமையேற்று செய்யப் போவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். ஆனால் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டவர்கள், ‘கட்சியும் ஆட்சியும் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலில் இயங்கும்’ என கூறி வருகிறார்கள்.
இந்தச் சூழலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருக்கும் அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவை இன்று (ஆகஸ்ட் 2) டி.டி.வி.தினகரன் சந்தித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது..
எனக்கும் திவாகரனுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. தேவையான நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். சசிகலாவுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா மீது அவதூறு வழக்கு தொடரப்படும்.
கமலஹாசன் அரசியலுக்கு வருவது என்பது அவரின் சொந்த விஷயம். அரசியலுக்கு யார் வருவதையும், யாரும் தடுக்க முடியாது. தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து வர உள்ள நாடாளுமன்றம் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெற பாடுபடுவேன். கட்சி பணிக்காக தலைமை கழகம் சென்று பணியாற்றுவேன்.
அமைச்சர் ஜெயக்குமார் கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை. அமைச்சர்கள் ஏதோ ஒருவித பயத்தால் பேசி வருகிறார்கள். துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் என்னை கட்டுப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை. சுற்றுப் பயணத்தின் போது நடைபெறும் பொதுக் கூட்டங்களில் அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசுவேன்.
எனக்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. துணை குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு கொடுப்போம். இவ்வாறு தினகரன் கூறினார்.