கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்யநாராயண ராவ் அனுப்பிய நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வேன். மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன் என கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா அதிரடி தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகி மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி ரூபா மவுட்கில், “கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ.1 கோடியும், சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு ரூ.1 கோடியும்” சசிகலா தரப்பினர் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல், கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பிய அவர், ஊடகங்களிலும் இது குறித்து பேசினார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உயர்நிலை விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான அக்குழுவினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறைத்துறை டிஜிபி-யாக இருந்த சத்யநாராயண ராவ், டிஐஜி-யாக இருந்த ரூபா உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரூபா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என கூறி ரூபாவுக்கு சத்யநாராயண ராவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், நான் எனது கடமையை செய்ததற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். சத்யநாராயண ராவ் அனுப்பிய நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வேன். இது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன் என ரூபா தெரிவித்துள்ளார்.