ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவன் ஜெகதீஸ்வரன் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு 2 முறை சட்டம் ஏற்றி, அதை ஆளுநருக்கு அனுப்பியது. முதல் முறை ஆளுநர் அதை திரும்ப அனுப்பினார். இதைத்தொடர்ந்து மீண்டும் அதே சட்டம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவிற்கு நானாக இருந்தால் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று கூறினார்.
இந்நிலையில் நீட் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் “ தமிழக கலாச்சாரத்தின் ஆணிவேர் குடும்பம்தான், இதனால் தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 6 முறை ஆட்சி செய்த, திமுக அரசு வெறும் 5 மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே அமைத்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி அதிகளவு மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு தந்துள்ளார். மேலும் 30 ஆயிரம் கோடி ஊழல் என்று பேசிய பழனிவேல் தியாகராஜனை பதவியிலிருந்து நீக்கி, டம்மி அமைச்சராக மாற்றியது ஏன் ? . தமிழகத்தில் 1000 ஆண்டுகள் ஆனாலும் நீட் தேர்வை தடுக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil