New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/09/Senthil-balaji.jpg)
செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரேடி சோதனையில் ஈடுபட்டனர். டிடிவி தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, சமீபத்தில் எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீது ரூ. 95 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த சமயத்தில், போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி,ரூ. 4.25 கோடி லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதேபோல, செந்தில்பாலாஜி ரூ.1.17 கோடி மோசடி செய்ததாக போக்குவரத்து துறை உதவி மேலாளரும் புகார் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்போது, 14 பேரிடம் வேலை வாங்கி தருவதாக, ரூ.95 லட்சம் மோசடி எழுந்தது. இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எந்த நிலையிலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன்காரணமாக செந்தில் பலாஜி முன்ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் டிடிவி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அடுத்த கட்டமாக, செந்தில் பலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். கரூரில் செந்தில் பலாஜியின் ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு சொந்தமாக உணவகங்கள், நிதி நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இவற்றில், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக வருமான வரித்துறைக்கு தொடர் புகார் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கரூர்-கோவை சாலையில் உள்ள உணவகம், ராமகிருஷ்ணா புரத்தில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுக்களாக சென்று சோதனை நடத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.