/tamil-ie/media/media_files/uploads/2017/12/edapadi4-2.jpg)
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ 1 கோடி உதவி வழங்குவதாக தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆய்வாளர் பெரியபாண்டியன் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா தேவர்குளம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மூவிருந்தவல்லியை சேர்ந்தவர்! கடந்த 2000-மாவது ஆண்டில் தமிழக காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டும் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற இவர், கடந்த இரு மாதங்களாக சென்னை, மதுரவாயல் டி-4 காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பை ஏற்றார்.
ஆய்வாளர் பெரியபாண்டியன் உள்ளிட்ட போலீஸ் படையினர், அண்மையில் சென்னை புழல் பகுதியில் ஒரு நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை வழக்கை துப்பு துலக்கி வந்தனர். அந்தக் கொள்ளையர்களை தேடி ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். இன்று காலையில் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் மேற்படி கொள்ளையர்களை இவர்கள் சுற்றி வளைத்தபோது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆய்வாளர் பெரியபாண்டியன் குண்டு பாய்ந்து இறந்தார்.
ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பம், சென்னை ஆவடியில் வசிக்கிறது. அவரது மூத்த மகன் கல்லூரியிலும், இளைய மகன் 8-ம் வகுப்பும் படிக்கிறார்கள். பெரியபாண்டியன் மறைவையொட்டி அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.
பெரியபாண்டியன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 1 கோடி நிதி உதவி வழங்க இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 போலீஸார் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும் கூறியிருக்கிறார். மேற்படி கொள்ளையர்களை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.