/tamil-ie/media/media_files/uploads/2017/07/TTV-Dinakaran.jpg)
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பெயரில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 44 லட்சம் பவுண்டு முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ஆம் ஆண்டில் டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்கைப் பதிவு செய்தனர்.
அதேபோல், ஐரோப்பிய நாடுகளில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன்வெஸ்ட்மென்ட், டெண்டி இன்வெஸ்ட்மென்ட், பேனியன் ட்ரீ ஆகிய மூன்று நிறுவனங்கள் சார்பில் இங்கிலாந்து பார்க்லே வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ஒரு லட்சம் பவுண்டு முறைகேடாக முதலீடு செய்யப்பட்டதாக கூறபபடுகிறது. இதுதொடர்பாக டிடிவி தினகரன் மீது கடந்த 1996-ல் அமலாக்கத்துறை மற்றொரு வழக்கையும் பதிவு செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிடிவி தினகரன் மீதான இந்த இரண்டு வழக்கு விசாரணையும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்கவும் டிடிவி தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.