
மணிப்பூரில் ஆயுத சட்டத்தை எதிர்த்து போராடிய இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா. 45 வயதான அவர் கடந்த 16 வருடங்களாக காந்திய வழியில் போராட்டம் நடத்தி வந்தார். கடந்த வருடம் போராட்டத்தை கைவிட்ட அவர், சமீபத்தில் நடந்த மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். வெறும் 90 வாக்குகள் பெற்று அவர் தோல்வியை தழுவினார்.
இதனால் மனம் வெறுத்துப் போன அவர் அரசியலுக்கு முழுக்குப் போட்டார். அதன் பின்னர் அமைதியை தேடி கேராளா சென்றார். அங்கிருந்து தமிழகத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வந்து தங்கினார். பெருமாள் மலை பகுதியில் அவர் வாடகை வீட்டில் தனது நண்பருடன் தங்கியிருக்கிறார். உப்புப்பாறையில் உள்ள ஜெண்டா ஆசிரமத்துக்கு தினமும் சென்று தியானம் செய்து வருகிறார்.
இரோம் ஷர்மிளா தனது நண்பரான தேஸ்மன் கொட்டின்கோவை திருமணம் செய்ய உள்ளதாக தன்னை சந்திக்க வருபவர்களிடம் சொல்லி வருகிறார். திருமணம் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. திருமணத்துக்கான இடம் தேர்வு நடந்து வருகிறதாம்.
போராளியான இரோம் சர்மிளாவை அடையாளம் கண்டு கொண்ட அந்த பகுதி மக்கள் அவரை அன்புடம் உபசரிக்கின்றனர். அந்த பகுதி மக்களின் அன்பும் அரவணைப்பும் தனக்கு அமைதியை தருவதாக இரோம் சர்மிளா சொல்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.