சசிகலாவுக்குச் சொந்தமான ஜாஸ் சினிமா அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் ஜாஸ் சினிமா நிறுவனத்தின் 11 லக்ஸ் தியேட்டர்கள் அமைந்துள்ளன. இந்த தியேட்டர்களை, சசிகலா 1000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், ஜெயலலிதாவோ, சசிகலாவோ இதுகுறித்து பதில் அளிக்கவில்லை. எனவே, இந்த விவகாரம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியானது.
இதைத் தொடர்ந்து, தியேட்டர்களை நாங்கள் சசிகலாவுக்கு விற்கவில்லை என மால் உரிமையாளர் தெரிவித்தார். ஃபீனிக்ஸ் மாலை உருவாக்கிய கிளாசிக் மால் டெவலப்மெண்ட் நிறுவனம் அளித்த விளக்கத்தில், ‘ஃபீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டர்களை 1000 கோடி ரூபாய் கொடுத்து சசிகலா வாங்கியதாக வெளியான தகவலில் உண்மையில்லை. நாங்கள் யாருக்கும் தியேட்டர்களை விற்கவில்லை. ஜாஸ் சினிமாஸ் வாடகை உரிமை அடிப்படையில் தியேட்டர்களை நடத்தி வருகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கைக்குப் பின்னர் சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில், இன்று ஜாஸ் சினிமா அலுவலகத்தில் நடைபெறும் சோதனை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் அமைந்துள்ள ஜாஸ் சினிமாவின் கார்ப்பரேட் அலுவலகத்தில், 4 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இங்குதான் 11 தியேட்டர்களுக்குமான கணக்குகள் நிர்வகிக்கப்படுகின்றன. அத்துடன், 11 தியேட்டர்களுக்குமான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்யும் கால் செண்டரும் இங்குதான் செயல்பட்டு வருகிறது.
வாடகை அடிப்படையில் நடத்தப்படும் அலுவலகத்தில் ரெய்டு நடப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை சசிகலா தியேட்டர்களை சொந்தமாக வாங்கியதற்கான ஆவணங்கள் கிடைத்தால், சசிகலாவுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். ரெய்டைத் தொடர்ந்து, ஜாஸ் சினிமாவின் அதிகாரப்பூர்வ இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், தியேட்டர்களில் உள்ள காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.