நெல்லையை தலைமையகமாக கொண்டு செயல்படும் நிறுவனம் செய்யது குரூப் ஆப் கம்பெனி. செய்யது பீடி, செய்யது பைனான்ஸ், செய்யது காட்டன் மில்ஸ் மற்றும் பே-வாக் ஆடையகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சென்னை, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது.
செய்யது பீடி கம்பெனி அதிபரின் வீடு
இவற்றின் தலைமை அலுவலகம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ளது. செய்யது குரூப் நிறுவனம் வருமான வரியை முறையாக செலுத்தாமல் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் செய்யது குரூப்புக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
நெல்லை, சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நெல்லையில் வண்ணார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், சந்திப்புசிந்துபூந்துறையில் உள்ள செய்யது பைனான்ஸ் நிறுவனம், செய்யது லாட்ஜ், மூன்றடைப்பில் உள்ள செய்யது காட்டன் மில் நிறுவனம் மற்றும் பாளை ஐகிரவுண்டில் உள்ள செய்யது குரூப் நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை பெல்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் ரெய்டு
அதே போல் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள செய்யது குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான பே-வாக் ஆடை தயாரிப்பு நிறுவனம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள செய்யது பீடி குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த இடத்தில் மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.