சசிகலா சொந்தங்களின் தமிழக சொத்துகளை மட்டுமல்லாமல், பாண்டிச்சேரியில் டி.டி.வி.தினகரனின் பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
வி.கே.சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்தாலும் அவரைச் சுற்றிய பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை. இன்று (நவம்பர் 9) அதிகாலையில் இருந்து தமிழகம் முழுவதும் சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
தமிழகத்தைத் தாண்டி தெலங்கானா, டெல்லி என சசிகலா உறவினர்களின் சொத்துகளையும் வருமான வரித்துறையினர் விடவில்லை. சென்னை பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கும் காலையில் வருமான வரித்துறையினரும் மாநில போலீஸாரும் சென்றனர். டிடிவி தினகரனை அசையாமல் ஒரு இடத்தில் இருக்கும்படி போலீஸார் கூறினர்.
ஆனால் டிடிவி தினகரன், ‘என்னை ஹவுஸ் அரெஸ்டில் வைத்திருக்கிறீர்களா? நான் இப்பவே வழக்கறிஞர்கள் மூலமாக நீதிமன்றத்தில் முறையிடுவேன்’ என்றார். இதைத் தொடர்ந்து மாநில போலீஸார் நெருக்கடியை தவிர்த்தனர். வருமான வரித்துறை அதிகாரியும் அங்கு சோதனையை தவிர்த்துவிட்டுச் சென்றார். இதை டிடிவி தினகரன் தனது பேட்டியில் உறுதிப்படுத்தினார்.
ஆனால் பாண்டிச்சேரியில் உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு பொறுப்பில் இருந்தவர்களை அதிகாலையிலேயே எழுப்பி இந்த சோதனையை அதிகாரிகள் நடத்தினர். பண்ணையில் சில இடங்களை அதிகாரிகள் தோண்டிப் பார்த்ததாக தகவல்கள் வெளிவந்தன. எங்காவது பணம் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை கண்டறிய இதைச் செய்தார்களாம்.
பாண்டிச்சேரி பண்ணை வீட்டுச் சோதனை குறித்து டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘பணத்தை அங்கே புதைத்து வைத்திருப்பேன் என நினைத்துதான் அங்கு சோதனை போட்டிருக்கிறார்கள். பண்ணை வீட்டில் என்ன கிடைக்கும்? வேண்டுமானால், பண்ணைக்கு போடுகிற உரம் அங்கு இருக்கலாம். அதுவும் சாண உரம் போடுவதுதான் எங்கள் வழக்கம்!’ என அந்த டென்ஷனுக்கு மத்தியிலும் வருமான வரித்துறையை கலாய்த்தார் தினகரன்.