வி.கே.சசிகலா குடும்பத்தினரின் இல்லங்களில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு மெகா தோல்வி அடைந்துவிட்டதாக திவாகரன் கூறியிருக்கிறார்.
வி.கே.சசிகலா குடும்பத்தினரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். மொத்தம் 1800 அதிகாரிகள், 187 இடங்களில் நடத்திய இந்த ரெய்டு, இந்தியா கண்ட மெகா ரெய்டாக வர்ணிக்கப்படுகிறது.
வழக்கமாக ஒரு ரெய்டு முடிந்ததும், அதில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், தங்க நகைகள், ஆவணங்கள் குறித்து சில தகவல்களையாவது வருமான வரித்துறை அறிக்கையாக கொடுப்பது வழக்கம். ஆனால் சசிகலா குடும்பத்தினரின் இல்லங்களில் நடந்த ரெய்டு குறித்து இதுவரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து 1400 கோடி ரூபாய் சொத்துகள் வாங்கியதில் நடந்த வரி ஏய்ப்பு தொடர்பாகவும், சிறிய அளவில் ரொக்கப்பணம், தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கோடநாடு எஸ்டேட்டில் நடந்த சோதனையில், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு நடந்த பணப் பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ரெய்டுக்கு உள்ளானவரும், சசிகலாவின் சகோதரர்களில் ஒருவருமான திவாகரன் இது குறித்து இன்று அளித்த பேட்டியில், “வருமான வரித்துறையினர் நடத்திய மெகா ரெய்டு தோல்வி அடைந்துவிட்டது. அவர்களால் எதையும் கைப்பற்ற முடியவில்லை. பல இடங்களில் ஏதோ சி.டி.யை தேடி வந்ததாகவே (ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான சி.டி.) கூறியிருக்கிறார்கள். ஆனால் எங்கிட்ட சி.டி.யை கேட்கலை’ என கூறினார் திவாகரன்.
ஆளுனர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த திவாகரன், ‘எனக்கு என்னவோ வருகிற ஆர்.கே.நகர் தேர்தலில் அவரையே வேட்பாளரா நிறுத்தி முதல்வராக்க பார்ப்பாங்கனு நினைக்கிறேன். எடப்பாடிக்கும், ஓபிஎஸ்.ஸுக்கும் வேற வழி இல்லை. அந்த அளவுக்கு தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க தயாராகிட்டாங்க.
இது அவங்க உரிமை இல்லை. மக்கள் உரிமை. அதை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டியது அவங்க கடமை. இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துட்டு தேர்தலை அவர்கள் சந்திக்கணும்’ என்றார்.
ஐ.டி. ரெய்டு மெகா தோல்வி என ரெய்டுக்கு உள்ளானவரே கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் இது குறித்து தெளிவான தகவல்களை வெளியிடும் வரை சசிகலா தரப்பு கூறுவது மட்டுமே நம்பத் தகுந்த தகவல்களாக வெளியே உலவும்.