தினத்தந்தி பவளவிழாவிற்காக சென்னை வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துச் சென்றார். அப்போது திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோரும் அங்கிருந்தனர். இந்த சந்திப்பானது அரசியல் ரீதியிலானது என்று முணுமுணுக்கப்பட்டன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என எதிர்கட்சிகள் நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைபிடித்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பேசும்போது, திமுக தலைவர் மு கருணாநதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு என்பது அரசியல் ரீதியிலானது அல்ல என்றார். இது மனிதாபிமான ரீதியிலான சந்திப்பு என்றும், இதற்கு அரசியல் சாயம் பூச முயற்சிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றினால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் மு.க ஸ்டாலின்.
இந்த நிலையில், சசிகலா மற்றும் டிடிவி தினனகரன் ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு தொடர்புடைய 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையை தொடங்கினர். இதுபோன்ற சோதனையானது அரசியல் ரீதியிலானது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறன்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பான நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் , பிரதமர் நரேந்திர மோடி , திமுக தலைவர் மு கருணாநிதி சந்திப்பு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். கருணாநிதியின் வீட்டிற்கு மோடி சென்றபோதே, வருமான வரித்துறையினர் ஜெயா டிவி அலுவலகத்தில் நுழைவார்கள் என நினைத்தேன் என குறிப்பிட்டுள்ளார். அதோடு, ஆர்.கே நகர் தேர்தலுக்கான தேதியை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.