சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என, 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், அவற்றில் 40 இடங்களில் இன்றும் (வியாழக்கிழமை) சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (புதன் கிழமை) காலை 6 மணியளவில் சசிகலாவின் உறவினர்கள் விவேக், தி.நகரில் அமைந்துள்ள இளவரசியின் மகள் இல்லம், ஜெயா டிவி, அலுலவலகம், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் நிறுவனம், ஃபேன்ஸி ஸ்டீல்ஸ், நமது எம்ஜி.ஆர். அலுவலகம் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா, புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை குறித்து பேசிய டிடிவி தினகரன், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெறுவதாக தெரிவித்தார். தி.மு.க, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்தனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் போலி நிறுவனங்கள் என கண்டறியப்பட்ட 2 லட்சம் நிறுவனங்களில் சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் நிறுவனங்களும் அடக்கம் எனவும், அந்த போலி நிறுவனங்களை கண்டறிவதற்காகவே இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது. அந்த போலி நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு நடைபெற்றதா, அதன் கணக்கீடு என்ன என்பது குறித்து ஆராயும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 60 போலி நிறுவனங்கள் குறித்த ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவ்ஃபும், அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், சோதனை முடிந்தபின்னரே முழு தகவல்கள் வெளியாகும்.
இந்த வருமான வரித்துறை சோதனையில், 6 ஆணையர்கள் உட்பட 1,800 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாமல், டெல்லி, புனே, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்தும் அதிகாரிகள் இச்சோதனைக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். பெரியளவில் நடத்தப்படும் இந்த சோதனைக்கு ஆப்பரேஷன் க்ளீன் மணி என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகளின் காரில் திருமண நிகழ்வுகளில் ஒட்டப்படுவதுபோல், 'ஸ்ரீனி வெட்ஸ் மகி' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதுதான் அதிகாரிகளின் கோட் வார்டு.
இன்று (வியாழக்கிழமை) 40 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.