அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கூட்டம் நிறைவடைந்துள்ளது. அதில், திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
முதற் கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதையடுத்து, கடந்த 5-ம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்டமாக கடந்த 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. "வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்" என தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்திருந்தார். ஆனாலும், அன்றைய தினம் அவர்கள் போராட்டத்தை நடத்தினர். இதனால், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் வகுப்புகள் முடங்கியது.
எங்களை அழைத்து அரசு பேச வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அந்த அமைப்பினர், ஒருவேளை அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் வருகிற செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளோம் எனவும் அந்த அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. அதில், செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும். ஏழாம் தேதியன்று வட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். செப்டம்பர் 8-ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். தமிழக அரசு ஜாக்டோ ஜியோ தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் செப்டம்பர் 10-ம் தேதி அன்று ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் கூடி தீவிரமான அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்பார்கள் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.