அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால், அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
முதற் கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதையடுத்து, கடந்த 5-ம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்டமாக ஆகஸ்ட் 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தப் போராட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
ஆனால், "வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்" என தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார். இதற்கு அஞ்சாத ஜாக்டோ ஜியோ அமைப்பினர், எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடி பணிய மாட்டோம் என்று கூறி திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும், சுமார் 10 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தால் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எங்களை அழைத்து அரசு பேச வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அந்த அமைப்பினர், ஒருவேளை அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் வருகிற செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.