Advertisment

ஜல்லிக்கட்டு போட்டிகள்: தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Jallikattu 2019 Date: ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jallikattu Places, ஜல்லிக்கட்டு தேதி

Jallikattu Places, ஜல்லிக்கட்டு தேதி

ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்தாலோ நிரந்தம் ஊனம் அடைந்தாலோ அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது யார்? என தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உரிமை மீட்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மருத நிலத்தில் வாழ்ந்தவர்கள் தான் விவசாயத்தை தோற்றுவித்தவர்கள். அந்த வகையில் மருத நில விவசாயிகள் தான் உழவுக்கு தோள் கொடுக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கலாக கொண்டாடினர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளிலும் எங்குமே ஜல்லிக்கட்டு பற்றி குறிப்பிடப்படவில்லை. சேர, சோழ, பாண்டிய, பல்லவ காலத்துக்குப்பிறகு நாயக்க மன்னர்களின் காலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்குள் உருவானதுதான் ஜல்லிக்கட்டு. எனவே ஜல்லிக்கட்டுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இது தமிழ் மக்களின் விளையாட்டு என்பதற்கு கலித்தொகை தவிர்த்து வேறு எதிலும் ஆதாரம் இல்லை. தமிழகத்தில் வடமாவட்டங்களில் ஜல்லிக்கட்டு இல்லை. 6 அல்லது 7 மாவட்டங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு உள்ளது. ஆனால் தற்போது அரசு மற்றும் சட்டத்தின் துணையுடன் சாதி ஆதிக்க விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறியுள்ளது.

கடந்தாண்டு அவனியாபுரத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட கமிட்டியில் தேவேந்திர குல வேளாளர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டனர். மேலும் அந்த ஜல்லிக்கட்டில் சாதிப் பெயரைச் சொல்லி காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது அதைவிடக் கேவலமானது.

எனவே தமிழக மக்களிடையே சாதியைச் சொல்லி பிரிவினை ஏற்படுத்தும் போட்டியாக இருந்தால் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைக்கப்படும் கமிட்டிகளில் தேவேந்திரர் உள்ளிட்ட அனைத்து சமூக பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்யும் வகையில் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம். சத்தியநாரயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே கோரிக்கையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு குழுவில் யாரெல்லாம் அங்கம் வகிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் கருத்து கூற முடியாது என்றனர்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டியின் போது போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உயிரிழந்தாலோ, நிரந்தம் ஊனம் அடைந்தாலோ அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது யார்? என தமிழக அரசு வரும் 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி பிரசித்திபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Madras High Court Jallikattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment