சென்னை வேளச்சேரியில், பாஜகவின் மூன்றாண்டு கால சாதனைகளை விளக்கும் கண்காட்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இன்று கலந்து கொண்டார்.
அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், “மூன்றாண்டுகளில் ஊழலற்ற ஆட்சியை பாஜக வழங்கியுள்ளது. இதற்கு முன் ஆண்ட காங்கிரஸ் காற்று, நிலம் என அனைத்திலும் ஊழல் செய்துள்ளது. இதுவரை 22 மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளேன். காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் கூட ஆய்வு செய்துள்ளேன். அதுபோல தான் தமிழகத்திலும் ஆய்வு செய்தேன்.
அதற்கு சில புத்திசாலிகள், ‘ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்று ஆய்வு செய்திருக்க முடியுமா?’ என்று கேட்கின்றனர். அவர்களுக்கு ஒன்று தெரிவித்துள்ளேன். புரட்சித் தலைவி அம்மா உயிருடன் இருந்தபோதே நான் தலைமைச் செயலகத்திற்கு வந்து ஆய்வு நடத்தினேன். இதற்காக ஞாயிற்றுக் கிழமை கூட ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்தார். இதற்கு முன் தமிழகத்தில் இப்படியோர் நிகழ்வு நடந்ததில்லை” என்றார்.
மேலும், தமிழகத்தில் பலர் வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளனர் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மோடியே நாட்டை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.