மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி, வரும் 30-ஆம் தேதி (திங்கள் கிழமை) விசாரணையை துவங்க உள்ளார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 5 அன்று உயிரிழந்தார். பல்வேறு உடல் நலக்குறைவுகள் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறப்புக்கு பின், அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. அப்போது ஒரு அணிக்கு தலைமை வகித்த ஓ.பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையின்போதும், இந்த கோரிக்கையையே பிரதானமாக முன் வைத்தார்.
ஓ.பன்னீர் செல்வம் நீதி விசாரணைக்கு வலியுறுத்திய நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்டு 17 அன்று அறிவித்தார்.
இதையடுத்து, அதிமுகவின் இரு அணிகளும் ஆகஸ்டு 21 அன்று இணைந்தன. ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. அதில், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து செப்டமர் 25-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது”, என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்பின், விசாரணை ஆணையம் இயங்க எழிலகத்தில் அமைந்துள்ள கலச மஹாலில் இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு, ஒலி ஊடுருவாத அறை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆனால், 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வரும் 25-ஆம் தேதி முதல் விசாரணை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் விசாரணை துவங்கப்படவில்லை.
இந்நிலையில், விசாரணையை வரும் 30-ஆம் தேதி (திங்கள் கிழமை) துவங்க உள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விசாரணை முழுவதும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். ஜெயலலிதா மரணம் குறித்து அறிந்தவர்கள் உறுதிமொழி பத்திரவடிவில், வரும் நவம்பர் 22-ஆம் தேதிக்குள் நேரடியாக தெரிவிக்கலாம். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடி தொடர்பு உடையவர்களும் தகவல்களை கூறலாம்.”, என தெரிவித்தார்.
இதனிடையே, இன்னும், 2 மாதங்களுக்குள் விசாரணையை முழுமையாக முடிக்க முடியுமா? ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Jayalalitha death enquiry will starts on october 30 says retired judge arumugasamy
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்