சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த், இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார். அதில், "இப்போதும் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாதான். கட்சி அவரது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எங்கள் பக்கம் தான் உள்ளார். கட்சியின் தலைமை அலுவலகச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் சசிகலா சார்பிலேயே இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரி பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
தேவை ஏற்பட்டால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவைச் சந்திப்பார். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான முடிவை சசிகலாவே எடுப்பார். அதிமுகவில் நான் உறுப்பினராக இருக்கிறேன். உரிய நேரத்தில் அரசியலில் நேரடியாக களமிறங்க இருக்கிறேன். அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு சாத்தியமே இல்லை.
ஓ.பன்னீர்செல்வம் ஏன் அப்படிச் செய்தார் என்பது எங்களுக்கு புரியவில்லை. ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் சசிகலாவுக்கு மட்டும் தான் முழுமையாக தெரியும்.
ஜெயலலிதாவின் உயிரை எனது தந்தை திவாகரன் இரண்டு முறை காப்பாற்றி இருக்கிறார். போயஸ் தோட்டம் சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. தீபா பற்றி பேசுவது அர்த்தமே இல்லை என்றே நான் கருதுகிறேன். அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாதவர்தான் தீபா. ஜெயலலிதா உயில் எழுதி வைத்தாரா என்பது குறித்து சசிகலாதான் சொல்வார். போயஸ் கார்டன் யாருக்கு சொந்தம் என்பது குறித்து எனது அத்தை சசிகலாதான் முடிவு செய்ய முடியும்.
நாங்கள் ஏற்கனவே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இனி புதிதாக சொத்துகளை வாங்கி குவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும், குடும்பம் என்ற அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மாட்டோம். சில அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சட்டரீதியாக அதனை எதிர்த்து போராடுவோம் என்றார்.
கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்த ஜெயானந்த், 'எங்கள் பொறுப்பில் உள்ள இடத்திற்குள் இருக்கும் ஆவணங்களை நாங்களே திருட வேண்டிய அவசியம் என்ன? தேவை ஏற்பட்டால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிடுவோம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.