இந்திய தர நிர்ணய ஆணையம் கொண்டுவந்துள்ள புதிய ‘ஹால்மார்க்’ விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று தமிழகத்தில் 30,000க்கும் மேற்பட்ட ஆயிரம் தங்க நகை கடைகள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், நகைக்கடைகள் காலை 9 மணி முதல் 11:30 மணி வரை இயங்கவில்லை. பிறகு, வழக்கம் போல கடைகள் செயல்பட்டன.
இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) இந்த ஆண்டு ஜூன் மாதம் கொண்டுவந்த புதிய விதிமுறை, நகைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் தங்க தகைகள் அனைத்திற்கும், இனி புதிய ‘ஹால்மார்க்கிங்’ தர அடையாள எண் என 6 இலக்கம் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்த புதிய விதியால், தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை மீறப்படுகிறது என்றும் சிறு நகை வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என நகை வணிகர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்திய தர நிர்ணய ஆணையம், புதிய தர முத்திரை வழங்கும் வசதி உடைய, நாட்டின் 256 மாவட்டங்களிலும், தங்க நகைகள் விற்பனையின் போது, தர முத்திரை கட்டாயம் என்று கூறியுள்ளது. இதனால், தங்க நகைகள் தேங்கி விற்பனை பாதிக்கும். விலையும் அதிகரிக்கும். ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்று நகை வணிகர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சென்னை நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் உதய் வும்மிடி கூறுகையில், கண்காணிப்பு பொறிமுறையின் அடிப்படையில் ஹால்மார்க் தனி அடையாளம் (HUID) வழங்கப்படுகிறது. இதற்கும் தங்கத்தின் தூய்மையைக் கண்டறிவதற்கு தொடர்பு இல்லை என்றார். இது நேரத்தை விரையமாக்கும் செயல்முறையாகும். அதோடு, மதிப்பீட்டு மையங்களுக்கு நகைகளை அடையாளப்படுத்தும் திறன் இல்லை என்று கூறினார்.
மேலும், அவர்ஹால்மார்க் செய்யக் காத்திருக்கும் நகைகளின் கையிருப்பு ஏற்கனவே குவிந்து கிடக்கும்போது, HUID செயல்முறை மேலும் தாமதத்திற்கு வழிவகுக்கும். இது தங்க நகை விற்பனை துறையை பாதிக்கும். வாடிக்கையாளர்களின் விவரங்களை கேட்கும் புதிய செயல்முறை, அவர்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றார்.
இந்திய தர நிர்ணய ஆணையத்தில் (BIS) பதிவுசெய்யப்பட்ட 47,000 நகைக்கடைகளில் கிட்டத்தட்ட 25% தமிழகத்தைச் சேர்ந்தவை என்று சென்னை நகைக்கடை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறினார்.
அவற்றில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு நகைக்கடையில் சுமார் 10 கிலோ தங்க நகைகள் ஹால்மார்க் செய்ய காத்திருக்கிறது.
மதிப்பீட்டு மையங்களுக்கு வழங்கப்படும் நகைகளின் காப்பீட்டு காரணி குறித்து தெளிவு இல்லை. தங்க ஆபரணங்களின் சில்லறை விற்பனை விலைகள் தொடர்ந்து சரிந்த பிறகு சமீபத்தில் 10% உயர்ந்தது. புதிய ஹால்மார்க் செயல்முறை தொழிலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சலானி கூறினார்.
எனவே, இந்திய தர நிர்ணய ஆணையத்தின் (BIS) புதிய விதிமுறையான அனைத்து நகைகளுக்கும் தனித்துவமான ஹால்மார்க் அடையாளம் அளிக்கப்பட வேண்டும் என்பதை எதிர்த்து ஆகஸ்ட் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நகைக் கடை உரிமையாளர்கள் காலை 9 மணி முதல் 11.30 வரை நகை கடைகளை அடையாள ரீதியாக மூடும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
அதன்படி, இந்த புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அடையாள வேலை நிறுத்தமாக, சென்னையில் 7,000 நகை கடைகள் உட்பட, மாநிலம் முழுதும் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகை கடைகள் இன்று காலை 9 மணி முதல், 11:30 மணி வரை மூடப்பட்டன. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட சென்னையில் உள்ள நகைக் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அடையாள ரீதியாக நகைக் கடைகள் மூடப்பட்டன. சில இடங்களில் நகைக் கடை உரிமையாளர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில், இந்த புதிய விதியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
நகைக்கடை வியாபாரிகளின் இந்த அடையாள போராடத்தை கவனத்தில் கொள்ளாமல், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து சென்னை நகை வணிகர்கள் சங்கத்தின் தலைவர் உதய் உம்மிடி உம்மிடி கூறுகையில், “இதுவரை அரிய உபயோகமான தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவது இந்தியாவை பொறுத்தவரை, அவரவர் விருப்பம் என்பதே வழக்கமாக இருந்தது. இப்போது திடீரென இந்திய தர நிர்ணய ஆணையம், புதிய ஹால்மார்க்கிங் தர முத்திரை வழங்கும் வசதி கொண்டுள்ள இந்தியாவின் 256 மாவட்டங்களிலும் இனி, தங்க நகை விற்பனையின்போது இந்தத் தர முத்திரை கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.
இங்கு போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் ஏற்கனவே 16 கோடி முதல் 18 கோடி தங்க நகைகள் முடங்கி உள்ளன. தற்போதுள்ள ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையங்கள், நாளொன்றுக்கு 2 லட்சம் நகைகளுக்கு மட்டுமே முத்திரை வழங்கும் திறனைக் கொண்டுள்ளன. அதனால், கிட்டத்தட்ட அடுத்த 3 வருடங்களுக்கு தேவையான நகைகள் தேக்கமடைந்து விற்பனைக்கு வர இயலாமல் பின்தங்கியுள்ளன. இன்னும் 3-4 ஆண்டுகள் கழித்த பிறகே தற்போது ஹால்மார்க் முத்திரை பெற தரப்பட்டுள்ள நகைகள் முத்திரை பெற்று முழுமையாகத் திரும்பி வரும் என்ற நிலை உள்ளது. ஏற்கெனவே தங்க நகை விற்பனை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய விதியால் மேலும் பாதிப்புக்குள்ளாகும். அதுமட்டுமல்லாம், இந்த புதிய விதியால், சிறிய அளவில் தங்க நகை வணிகத்தில் ஈடுபட்டுள்ள தங்க நகை வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த தர முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அந்த முத்திரை இல்லாத நகை வணிகம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த புதிய ஹால்மார் முத்திரை முறையில், நகை வாங்குவோரின் தனி விவரங்களையும் அளிக்க வேண்டியுள்ளதால், இது தனிநபர் ரகசியம் காக்கும் உரிமையை மீறுகிறது. மேலும், அவர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறினார்.
மேலும் சென்னையில் இயங்கும் மற்றொரு தங்க நகை மற்றும் வைர வணிகர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், “தற்போது இந்தியா முழுவதும் உள்ள 47 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவு பெற்ற நகை வணிகர்கள் ஒவ்வொருவரும், தலா 10 கிலோ எடைக்கும் மேற்பட்ட தங்க நகைகளை ஹால்மார்க் முத்திரை இல்லை என்ற காரணத்தால் தங்களிடமே முடக்கி வைத்துள்ளனர். இந்த அளவில் பார்தாலே, இந்தியா முழுவதும் 470 டன் தங்க நகைகள் முடக்கம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில், புதிய ஹால்மார்க் முத்திரை திட்டம் தன்னிச்சையானது. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நகை வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.