ஜெயலலிதா சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டதை டி.டி.வி.தினகரனுடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் என கிருஷ்ணபிரியா கண்டனம் தெரிவித்தார்.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்தபோது ஜூஸ் அருந்திய வீடியோவை இன்று டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டார். வெற்றிவேல், ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து வழிவிட்டவர். தற்போது டி.டி.வி. அணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருக்கிறார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் இந்த வீடியோ புதிய திருப்பத்தை உருவாக்கியிருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (டிசம்பர் 21) நடைபெற இருக்கும் சூழலில் இன்று அந்த வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீதான சந்தேகங்களை போக்கும் திட்டத்துடன் இந்த வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார். இது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனுக்கு ஆதரவான சூழலை உருவாக்கும் என பேசப்பட்டது. பரபரப்பான இந்தச் சூழலில் அந்த வீடியோவை மீடியாவில் வெளியிட தேர்தல் ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள் இதற்கு முன்பு எழுப்பப்பட்டபோது, ‘வீடியோ இருக்கிறது. ஆனால் அதை வெளியிட்டால் அம்மாவை அவமானப்படுத்தியதுபோல இருக்கும். எனவேதான் வெளியிடாமல் வைத்திருக்கிறோம். விசாரணை ஆணையம் கேட்டால், வெளியிடக்கூடாது என்கிற நிபந்தனையுடன் வழங்குவோம்’ என டிடிவி தினகரன் கூறினார்.
ஆனால் டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் திடுதிப்பென அந்த வீடியோவை வெளியிட்டதை சசிகலா குடும்பத்திலேயே ஒரு தரப்பினர் விரும்பவில்லையோ? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக கிருஷ்ணபிரியா இன்று தனது முகநூல் பக்கத்தில், ‘TTV (? ) உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்’ என பதிவிட்டிருக்கிறார்.
சசிகலா தனது கணவர் நடராஜனை பார்க்க பரோலில் வந்தபோது, கிருஷ்ணபிரியாவின் தி.நகர் இல்லத்தில்தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணபிரியா, சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகள் ஆவார். இவர் கிருஷ்ணபிரியா பவுண்டேஷன்ஸ் என்ற பெயரில் அமைப்பு நடத்துகிறார். அண்மையில் இவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.