Advertisment

ஜெ. மரணத்திற்கு நீதி விசாரணை, போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லம் : முதல்வர் எடப்பாடி இரட்டை அறிவிப்பு

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெ. மரணத்திற்கு நீதி விசாரணை, போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லம்  : முதல்வர் எடப்பாடி இரட்டை அறிவிப்பு

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், ஜெ. வாழ்ந்த அவரது போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Advertisment

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். 70-க்கும் மேற்பட்ட நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை தேறி வந்ததாக முதலில் சொல்லப்பட்டது. பிறகு திடீரென அவர் இறந்ததாக அறிவிப்பு வெளியானதும், அ.தி.மு.க. தொண்டர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவமனையில் ஜெ. இருந்தபோது அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படாததும் சர்ச்சையாக இருந்தது. எனவே ஜெ. மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவேண்டும் என்கிற கோரிக்கை ஆரம்பம் முதல் இருந்து வந்தது. சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க.வில் போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெ.மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யவேண்டும் என்பதை தனது ‘தர்மயுத்தத்தின்’ ஒரு கோரிக்கையாக முன்வைத்தார்.

ஆரம்பத்தில் இதை எடப்பாடி தரப்பு ஏற்கவில்லை. சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற உத்தரவின்படி நடப்போம் என எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சரவை சகாக்களும் கூறி வந்தனர். அதேசமயம் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக கடந்த சில நாட்களாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வந்தது.

ஓ.பி.எஸ். அணி கோரிக்கையை ஏற்று கடந்த 10-ம் தேதி அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக தீர்மானம் மூலமாக அறிவித்தனர். தினகரனின் நியமனமே செல்லாது என அறிவித்தனர். எனவே ஒ.பி.எஸ். அணியின் மற்றொரு கோரிக்கையான ஜெ. மரணம் குறித்த விசாரணை அறிவிப்பும் வர இருப்பதாக பேச்சு இருந்தது.

இந்தச் சூழலில் இன்று (ஆகஸ்ட் 17) மாலை 4 மணிக்கு கோட்டையில் நிருபர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது இரண்டு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

1. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

2.மக்களின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம், அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும். அங்கு ஜெயலலிதாவின் புகழை போற்றும் வகையில் புகைப்படங்கள், அரங்குகள் அமைக்கப்படும்.

இந்த அறிவிப்புகளை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, “ஓய்வுபெற்ற நீதிபதி யார்? என்பது குறித்தும், அதன் அதிகார வரம்புகள், கால வரம்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்’ என்றார். அணிகளின் இணைப்புக்காக இந்த நடவடிக்கையா? எனக் கேட்டபோது, ‘இது மக்கள் கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்ட நடவடிக்கை’ என முடித்தார் எடப்பாடி.

O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment