கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சிஎஸ் கர்ணனுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் மோதல் போக்கு நிலவிவந்தது. இதனிடையே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கும் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார் சிஎஸ் கர்ணன்.
இதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படாததால் சிஎஸ் கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிஎஸ் கர்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கடந்த மே 9-ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதையொட்டி, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக்காலத்திலேயே தலைமறைவானார்.
இந்நிலையில், சுமார் ஒரு மாத காலம் தலைமறைவாக வாழ்ந்துவரும் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் இன்றோடு நிறைவுறுகிறது.
இதையடுத்து, முடங்கிக்கிடந்த நீதிபதி கர்ணனைத் தேடும் பணி, மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகளால் சிறைத்தண்டனை பெற்ற முதல் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமறைவாக இருக்கும்போதே பணி ஓய்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.