/indian-express-tamil/media/media_files/2025/10/30/edappadi-k-palaniswami-reaction-ops-and-sengottaiyan-travelling-in-same-car-tamil-news-2025-10-30-15-45-56.jpg)
KA Sengottaiyan expelled| AIADMK| Edappadi Palaniswami
நேற்று (அக்டோபர் 30) நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சரும், முக்கிய நிர்வாகியுமான கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் ஒன்றாகப் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான்” என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், இன்று (அக்டோபர் 31) சேலத்தில் முக்கிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
செங்கோட்டையன் நீக்கம்: இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை
இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“கழகத்தின் கொள்கை-குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்;
கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்குக் மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்குக் களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும்,
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முந்தைய நடவடிக்கை: முன்னதாக, அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்குச் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்ததற்காக, அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து மட்டும் விடுவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
செங்கோட்டையன் பதில் என்ன?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவர், “என்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து நாளை (நவம்பர் 1) விரிவாக விளக்கம் அளிக்கிறேன். நாளை காலை 11 மணிக்குத் தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாகப் பேசுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us