கமல்ஹாசன் அவரே நடித்து வெளியான குணா படத்தின் கதாபாத்திரம் போல வாழ்கிறார் என அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார். கமல் வெளியிட்ட ட்வீட்-டுக்கான ரீயாக்ஷன் இது!
கமல்ஹாசன், அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், தனி அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதற்கு முன்னோட்டமாக தமிழக அரசையும் அமைச்சர்களையும் விமர்சித்து வருகிறார்.
கமல்ஹாசன் வெளியிட்ட ட்வீட்..
கமல்ஹாசன் நேற்று (19-ம் தேதி) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்’ என குறிப்பிட்டார்.
கமல்ஹாசனின் இந்த ட்வீட்-டுக்கு முழுமையான அர்த்தம் இன்னும் யாருக்கும் புரியவில்லை. வி.கே.சசிகலா குடும்பத்தினர் மீது நடந்த ரெய்டை மனதில் வைத்து இந்தப் பதிவை அவர் வெளியிட்டதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இன்னொரு தரப்பினர் இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசைத்தான் கமல்ஹாசன் அட்டாக் செய்வதாக குறிப்பிடுகின்றனர். கமல்ஹாசனே அவரது ட்விட்டருக்கு பொழிப்புரை வழங்கி இன்னொரு ட்வீட் போட்டால்தான் அதில் தெளிவு கிடைக்கும்.
ஆனால் அதற்கு முன்பாக அமைச்சர் ஜெயகுமார் அதிரடியாக கமல்ஹாசனுக்கு ரீயாக்ட் செய்திருக்கிறார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், கமல்ஹாசனை அவரது குணா படத்தில் வரும் கதாபாத்திரமாக சித்தரித்தார். 1992-ல் வெளியான குணா படத்தில், கமல்ஹாசன் ஒரு பெண் மீது காதல் என்கிற நிலையைத் தாண்டி பித்து பிடித்தவராக நடித்திருப்பார். கிட்டத்தெட்ட மனநிலை பாதித்தவர் போல! அந்த கதாபாத்திரத்தை ஜெயகுமார் உருவகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயகுமார் தனது பேட்டியில் கூறியதாவது: ‘கமல்ஹாசன் தமிழக அரசு மீது அபாண்டமான குற்றங்களை சுமத்துவதை பொறுக்க முடியாது. ஆதாரம் இல்லாமல் குற்றங்களை சுமத்தி வரும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது. கமல்ஹாசன் யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறார் என்று வெளிப்படையாக தெரிகிறது. எங்கள் அம்மா ஆட்சி செய்தபோது, தமிழகத்தை விட்டு ஓடுவேன் என்று முதுகு எலும்பு இல்லாமல் கூறியவர்தான் இந்த கமல்ஹாசன்.
கமல்ஹாசன் அவரே நடித்த குணா படத்தில் வருவது போல் கற்பனை கதாபாத்திரத்தில் வாழ்கிறார். அவர் புதிய கட்சி தொடங்க, அவரது ரசிகர்களிடம் பணம் கேட்டவர். எனவே இவரைப் பற்றி இதற்கு மேல் சொல்ல வேண்டியதில்லை.
நாங்கள் அனைவரும் உணவில் உப்பு போட்டு சாப்பிடுகிறோம். மலிவான விளம்பரத்துக்காக கமல் செய்யும் உள் நோக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு ஊழியர்கள் குற்றம் செய்தால் கண்காணிப்பு குழுவிடம் கமல்ஹாசன் புகார் அளிக்கட்டும்’ என்றார் ஜெயக்குமார், காட்டமாக!
ஜெயகுமாரின் காட்டமான விமர்சனத்திற்கு சமூக வலைதளங்களில் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.