கமல்ஹாசன் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை யொட்டிய மாநாட்டில் மைதானம் நிறைய தொண்டர்கள் திரண்டனர். இதனால் கமல்ஹாசன் உற்சாகம் ஆனார்.
கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை பிப்ரவரி 21-ம் தேதி மதுரை மாநாட்டில் தொடங்கினார். அவரது 2-வது மாநாடு இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்தது. இதையொட்டி இன்று மாலை 3 மணிக்கு மேல் அங்கு தொண்டர்கள் திரள ஆரம்பித்தார்கள். மாலை 5 மணிக்கு மாநாடு தொடங்கியது.
கமல்ஹாசன் மாநாட்டின் LIVE UPDATES இங்கே
இரவு 7.50 : கடைசியாக, ‘ 3 மணியில் இருந்து காத்திருந்த ஊடக நண்பர்களுக்கு! 3 மணிக்குத்தான் இந்த இடத்தின் அனுமதிக்கான கடிதம் என்னிடம் கிடைத்தது. அதனால்தான் தாமதம். அதற்காக மன்னிப்பீர்கள் என கருதுகிறேன்’ என்றார் கமல்ஹாசன்.
இரவு 7.45 : ‘இது எண்ணிக்கை பார்க்கும் கூட்டம் அல்ல. எண்ணத்தை பார்க்கும் விழா. எண்ணிக்கை பார்க்க விரும்புகிறவர்கள் திருச்சி மாநாட்டுக்கு வாருங்கள்’ என பேசி முடித்தார் கமல்ஹாசன். தொடர்ந்து தேசிய கீதத்துடன் மாநாடு முடிந்தது.
இரவு 7.35 : மேடையில் பெண்கள் எழுப்பிய கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார். ‘நீங்கள் ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இங்கே அதற்கு வாக்குறுதி கொடுப்பீர்களா?’ என கேட்கப்பட்டது. ‘அறிவிச்சுட்டாப் போச்சு! கயவர்களுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டேன்’ என்றார் கமல்.
இரவு 7.30 : திருச்சி திருவெறும்பூரில் பலியான உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கமல்ஹாசன் கூறினார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்த போது 2 லட்சம் ரூபாய் கொடுக்க முடிவு செய்ததாகவும், கலந்து பேசாமல் 10 லட்சம் அறிவிப்பதற்கு உயர் மட்டக்குழு மன்னிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
இரவு 7.20 : மேடையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தத்து எடுக்கப்படும் கிராமம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
இரவு 7.15: கமல்ஹாசன் மேடையில் பேச ஆரம்பித்தார். திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளரால் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்ட உஷாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருத்துகளைகூறினார்.
இரவு 7.00 : மேடையில் கமல்ஹாசன் தவிர, பெண்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர்.
மாலை 6.30 : மக்கள் நீதி மய்யம் உயர் மட்டக்குழு உறுப்பினரான ஸ்ரீபிரியா பேசுகையில், ‘திருச்சியில் வேதனையான நிகழ்வு (உஷா மரணம்) நடந்திருக்கிறது. நமது முதல்வர் ஆட்சிக்கு வந்து இதற்கெல்லாம் தீர்வு கொடுப்பார்’ என்றார்
மாலை 6.30 : இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவையும் இந்த மாநாடையும் ஒப்பிட்டு அதிகமாக பேசிக்கொண்டனர். ரஜினி கூட்டம் அளவுக்கு ஆரவாரம் இல்லாவிட்டாலும், மைதானம் நிறைய கூட்டம் திரண்டது.
மாலை 6.00 : பொதுமக்களை இடையூறு செய்யும் விதமாக பேனர்கள் வைக்க வேண்டாம் என இன்று காலையே கமல்ஹாசன் கேட்டுக் கொண்டிருந்தார். எனவே தொண்டர்கள் ஓரளவு அடக்கி வாசித்தனர்.