கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. பெண் பேருந்து ஓட்டுநரான இவர் காந்திபுரம்- சோமனூர் வழியில் தனியார் பேருந்தை இயக்கி வந்தார். பெண் பேருந்து ஓட்டுநர் என்பதால் இவர் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தார். குறிப்பாக பெண்கள் இவருக்கு பலத்த வரவேற்பளித்தனர். இவரது திறமையை பாராட்டினர்.
இதையடுத்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார். இதையடுத்து தூத்துக்குடி நாடாளுமன்ற தி.மு.க உறுப்பினர் கனிமொழி ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கடந்த வெள்ளிக்கிழமை காந்திரபுரத்தில் இருந்து ஹோப்ஸ் வரை பயணம் செய்தார். அப்போது கனிமொழிக்கு டிக்கெட் வாங்குவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. தான் கனிமொழிக்கு டிக்கெட் வாங்குகிறேன் என்று சொல்லியும் பெண் பேருந்து நடத்துநர் அவரிடம் டிக்கெட் பெற்றதாக ஷர்மிளா புகார் தெரிவித்தார். இதன் பின் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக ஷர்மிளா மற்றும் அவரது தந்தை கூறினர்.
இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் இருதினங்களுக்கு முன் ஷர்மிளாவை சந்தித்து அவரின் திறமைக்கு வாழ்த்து கூறினார். அதோடு அவர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்ததாகவும் கூறப்பட்டது. ஷர்மிளா குடும்பத்தினர் கமல்ஹானை சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகின. ஷர்மிளாவுக்கு கமல் கார் கொடுத்தது அரசியல் லாபத்திற்காக என எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்தார்.
இதைத் தொடர்ந்து, கமல் ஷர்மிளாவுக்கு கார் பரிசளிக்கவில்லை என அவரது தந்தை கூறினார். அவர் கூறுகையில் கமல் சார் கார் கொடுக்கவில்லை. கார் வாங்குமாறு அட்வான்ஸ் பணமாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். சோர்வடையாமல் தைரியாக இருக்க வேண்டும் என ஷர்மிளாவிடம் கூறினார். உங்களை போல் நிறைய பெண்கள் முன்னுக்கு வர வேண்டும் எனவும் கமல் கூறியதாக ஷர்மிளாவின் தந்தை தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“