மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதற்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
ஆனாலும், பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியம் என்பது போலவே மத்திய அரசு செயல்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள தனி மனித சுதந்திரத்தை மீறும் வகையில் ஆதார் உள்ளதா என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான சலமேஷ்வர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்கே.அகர்வால், ரோகிந்தன் நாரிமன், ஏ.எம்.சப்ரே, சந்திராசூட், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் அப்துல் நசீர் ஆகிய 9 நீதிபதிகள் கொண்ட உயர் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் தீவிர விசாரணையை மேற்கொண்டது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "தனிமனித ரகசியம் என்பது அடிப்படை உரிமையே" என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்பதை உறுதிசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை வழங்கிய மதிப்பிற்குரிய நீதிபதிகளுக்கு மக்கள் நன்றி கூற வேண்டும். இதைப் போன்ற கணங்கள்தான் இந்தியாவை உருவாக்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.