பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதேபோல் தங்கள் பணியை செய்யாமல் இருக்கும் எம்.எல்.ஏ.க்களையும் நீதிமன்றம் கண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக, நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், 7-வது ஊதியக் கமிஷன் அளித்த பரிந்துரைகளின்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். அதில், ”ரூ.40,000, ரூ.50,000 என சம்பளம் வாங்கிக்கொண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எதிர்கால தலைமுறையினரை உருவாக்காமல் ஏன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்? வேலைநிறுத்தத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆசிரியர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து நஷ்ட ஈடு தர வேண்டி வரும். நீதிமன்ற உத்தரவை ஆசிரியர்கள் மதிக்கவில்லை என்றால் அவர்கள் நீதிமன்றத்துக்கே வர முடியாது.”, என நீதிபதி என்.கிருபாகரன் கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, “வேலைநிறுத்த நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக கருதப்படும் எனக்கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது”, என தெரிவித்தது.
நீதிபதியின் இந்த கருத்துகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், ”போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு மதிப்பிற்குரிய நீதிமன்றம் கண்டனங்களை தெரிவித்துள்ளது. அதேபோல், தங்கள் பணிகளை செய்யாமல் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவும் நீதிமன்றம் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன்.”, என பதிவிட்டார்.
மேலும், ”வேலை செய்யாமல் சம்பளம் இல்லை என்பது ஆசிரியர்களுக்கு மட்டும் தானா? ரெசார்ட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள குதிரை பேர அரசியல்வாதிகளுக்கு இல்லையா?”, எனவும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.