சசிகலா சொல்படி ஆட்சி நடத்தப்படவில்லை என கூற தயாரா என கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதனால், ஆத்திரம் அடைந்த தமிழக அமைச்சர்களோ மாறி மாறி கமல்ஹாசன் மீது விமர்சனங்களை போட்டுத் தாக்கினர். வழக்குப் போட்டுவிடுவோம் என்றும், வருமான வரி சரியாக கட்டியிருக்காரா என ஆய்வு செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். இப்படி பல்வேறு அமைச்சர்கள் தங்களுக்கு வந்தபடி கமல்ஹாசனை கடும் வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர்.
இதனிடையே கமல்ஹசானின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டுமே தவிர, அவரை மிரட்டக் கூடாது என்பது தான் பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கருத்து. விமர்சனங்களை அமைச்சர்கள் எதிர்கொண்டு, அதற்கு பதிலளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்துகள் தெரிவித்தனர். திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள், விமர்சனங்களை அமைச்சர்கள் எதிர்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக நச்சென்று ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டார் கமல்ஹாசன். அதில், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த பதிவு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. தான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், ரசிகர்கள் மற்றும் மக்கள் அமைச்சர்களுக்கு புகார்களை அனுப்பும்படியும் கமல்ஹாசன் தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
A request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம் pic.twitter.com/OFqbDaJ5wS
— Kamal Haasan (@ikamalhaasan) 19 July 2017
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ஃபேஸ்புக் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எங்கள் செலவில் குற்றவாளிகள் குடும்பத்துக்கு பரப்பன அக்ரஹாரத்தில் ஒரு மாளிகை கட்டி கொடுத்து விட்டார்கள் என்று 60 சதவிகிதம் சசிகலா அவர்கள் கட்சியை எதிர்த்தவர் நினைப்பது எங்கள் அறியாமையோ.? இன்று ஆட்சியில் இருப்பவர்கள் வெளிப்படையாகவே சிறையில் இருக்கும் சின்னம்மா சொல்படி ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் சிந்தனையை உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாற்றியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
அமைச்சர் ஜெயகுமாருக்கு.. 60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்?. குற்றவாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம். கையாடல் குற்றவாளியாக தீர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.
ஒன்று புரிகிறது அதிமுகவில் ஜெயகுமார் ஒருவர்தான் இதுவரை லஞ்சம் வாங்காதவர் போல தெரிகிறது. ஆனால் ஊழலுக்கு இன்று துணை போகிறாரே.. ஆட்சியில் இருக்கும் மந்திரி வீட்டில் ரெய்டு, பிரபல காண்ட்ராக்டர்கள் வீட்டில் கிடைத்த லஞ்ச லிஸ்ட். நீங்கள் வணக்கத்துடன் நடத்தும் ஆட்சி லஞ்ச ஊழலுக்கு சிறையிலிருக்கும் சசிகலா சொல்படி நடக்கவில்லை என்றுகூட சொல்ல முடியவில்லை?
இவ்வாறு சாருஹாசன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.