/indian-express-tamil/media/media_files/2025/10/23/kanimozhi-2025-10-23-11-42-51.jpeg)
Kanimozhi MP DMK
சென்னை வடகிழக்கு மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் இளம் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று (அக்.22) ரெட்டேரி லட்சுமிபுரத்தில் உள்ள ஜி.பி.எல் பேலஸில் நடைபெற்றது.
சென்னை வடகிழக்கு மாவட்டக் கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பயிற்சி பாசறையைத் துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
"ஆண்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் வரை சமூகம் மாறாது"
தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த கனிமொழி எம்.பி., ஒரு மாணவி எழுப்பிய ‘தொடரும் பாலியல் தொந்தரவுகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்?’ என்ற கேள்விக்குப் பதிலளித்துப் பேசினார்.
அவர் பேசுகையில், "நம்மைச் சிந்திக்க வைத்தவர் தந்தை பெரியார். காலம் காலமாகப் பின்பற்றி வந்த பழக்கங்களை எதிர்த்துக் கேள்வி கேட்டால், உன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும் என்று சொன்னவர் அவர்.
பாலியல் வன்கொடுமைகள் பற்றிப் பேசும் போது, நம் வீட்டில் பெண் குழந்தைகளிடம், '6 மணிக்கு வீட்டுக்கு வந்துவிட வேண்டும்', 'இந்த உடை போட்டுக் கொண்டு வெளியே போகாதே', 'இருட்டில் வெளியே செல்லாதே, ஏதேனும் தவறு நடந்துவிடும்' என்று திரும்பத் திரும்ப சொல்லி வளர்க்கிறார்கள். ஒரு பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே சொல்லி வளர்க்கிறோம்.
ஆனால், ஏதேனும் ஒரு வீட்டிலாவது, ஒரு ஆணைப் பார்த்து 'நீ ஒரு பெண்ணிடம் மரியாதையாக நடக்க வேண்டும்' என்று சொல்லி வளர்க்கிறோமா?
உடை என்பது அந்தப் பெண்ணின் உரிமை. இரவு 12 மணிக்கு அவள் வெளியே சென்றாலும், அவளைத் தவறாகப் பேசுவது தவறு. பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளைத் தொடுவது குற்றம். ஒரு பெண்ணுடைய உடலுக்கான உரிமை அவளுக்கு மட்டுமே உள்ளது. 'அவள் இல்லை' என்று சொல்லும் போது, அவளைத் தொடுவது தவறு என்று எத்தனை பேர் வீட்டில் சொல்லி வளர்க்கிறார்கள்? அதைச் செய்யும்போதுதான் இந்தச் சமூகம் மாறும்.
திருமண உறவுக்குள் நடக்கும் பாலியல் வன்முறைகளைத் தடுக்கச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சொன்னால், ஒன்றிய அரசு அதைத் தவறான முன்னுதாரணமாக மாறும் என்று மறுக்கிறது. அப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதனால்தான், சமூகம் மாறும் வரை, இந்த வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். பெண்களை எப்படிப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லித் தருகிறோமோ, அதே நேரத்தில், பெண்களைத் தவறாகப் பார்க்கக் கூடாது, அவர்களை ஒரு பொருளாகப் பார்ப்பது தவறு என்று சொல்லி ஆண்களுக்கு அந்தத் தெளிவை உருவாக்காமல் இந்தச் சமூகம் மாறாது" என்று கனிமொழி எம்.பி. ஆவேசமாகப் பதிலளித்தார்.
இந்த நிகழ்வில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி, திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.மதிவதனி, திமுக செய்தி தொடர்புத்துறை துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், மகளிர் அணியினரும் கலந்துகொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.