கன்னியாகுமரி மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையுடன் மீனவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம், ஓகி புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் மீட்கப்படாமல் இருப்பதாக கன்னியாகுமரியில் தினம்தோறும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ரயில் மறியல் நடத்திய மீனவர்கள் வைத்த கோரிக்கைகளில், ‘தேடுதல் வேட்டைக்கு மீனவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்பதும் ஒன்று! கடலோர காவல் படையினர் ஆழ்கடலில் சென்று தேடுவதில்லை என கிளம்பிய புகார்களை தொடர்ந்தே இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்தார்கள்.
தவிர, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் தூத்தூர், சின்னத்துறை பகுதி மீனவர்கள் எந்த திசையில் மீன்பிடிப்பார்கள் என்பதை மீனவர்களால்தான் சரியாக கண்டறிய முடியும் என்றும் கூறினர். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி எம்.பி.யுமான பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை போனில் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கையை தெரிவித்தார்.
பொன்.ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று அதை அனுமதிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக இனி கடலோர காவல் படையின் கப்பல்களில் தூத்தூர், சின்னத்துறை பகுதி மீனவர்களும் உடன் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிகிறது. மீனவர்கள் தேடுதல் வேட்டையில் இது புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.