கர்நாடகா கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த தொடர் கனமழையால் ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 110.55 அடியாக உயர்ந்துள்ளது. இதுபோல் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கபிலா ஆற்றிலும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி ஆற்றிலும் பாய்ந்தோடி, டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு சங்கமாவில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு12,444 கன அடியாக அதிகரித்துள்ளது..
அணையின் தண்ணீர் மட்டம் 64.90 அடியாக உயர்ந்துள்ளது; டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் இருப்பு 28.472 டி.எம்.சி. ஆக உள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“