/indian-express-tamil/media/media_files/2025/10/03/karur-2025-10-03-17-40-24.jpg)
Karur Stampede Asra Garg SIT Madras High Court TVK Vijay case Justice Senthilkumar
கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கூட்ட நெரிசல் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, வட மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் உடனடியாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஒன்றை அமைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு மற்றும் குற்றச்சாட்டுகள்:
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (அக்டோபர் 3, 2025) நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மிகக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
"கரூர் சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man-Made Disaster). இந்தச் சம்பவம் நடந்தவுடன் தவெக-வினர் எல்லோரும் அங்கிருந்து தப்பிவிட்டனர்."
"அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூக பொறுப்பைக்கூட தவெக-வினர் பின்பற்றவில்லை. என்ன மாதிரியான கட்சி இது?"
"கரூர் துயரத்திற்கு தவெக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது அக்கட்சித் தலைவரின் (விஜய்) மனநிலையைக் காட்டுகிறது" என்று நீதிபதி தெரிவித்தார்.
தலைமைப் பண்பு இல்லை என்ற விமர்சனம்:
நீதிபதி செந்தில்குமார் , "விஜய்யின் தேர்தல் சுற்றுப்பயணப் பேருந்து மோதி இரண்டு இளைஞர்கள் கீழே விழுந்த காட்சியை நீங்கள் பார்த்தீர்களா?" எனக் கேள்வியெழுப்பியதுடன், தவெக-வின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்.
"இந்தச் சம்பவம் நடந்த பிறகு நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டன. ஆனால், நிகழ்ச்சியை நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர் யாருமே மீட்புப் பணியில் இல்லை; எல்லோருமே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள்.
விஜய்யிடம் தலைமைத்துவப் பண்பு என்பதே இல்லை.
மக்களையும் குழந்தைகளையும் அவர்கள் மீட்டிருக்க வேண்டும். ஆனால், சம்பவத்துக்குப் பொறுப்பேற்காமல் இருந்துவிட்டார்கள்" எனக் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
போலீஸ் மீது கேள்வி எழுப்பிய நீதிபதி:
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறிய நீதிபதி, காவல்துறை மீதும் கேள்விகளை எழுப்பினார்.
"இந்தச் சம்பவத்தில் விஜய் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யாதது வருத்தம் அளிக்கிறது. விஜய்யின் பேருந்து மோதிய விபத்து குறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? காவல்துறை எல்லா நேரத்திலும் கண்மூடி இருக்க வேண்டுமா?" என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு:
கடும் கண்டனங்களுக்குப் பிறகு, கரூர் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) சென்னை உயர்நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது.
- இந்தக் குழுவில் கரூர் மாவட்ட எஸ்பி-யை இணைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- கரூர் விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த மாவட்ட போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்கள் தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.